19 ஆகஸ்ட், 2009

நான், அனிதா, கடவுள்...!

விவசாயிகள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் அனிதா என்ற இளம்பெண்ணை சந்தித்தேன். கிறித்தவ மதபோதகர்களுக்கான கல்வி பயில்வதாக தெரிவித்தார். மேலும் தனக்கு திருமணமாகி, இரு குழந்தைகள் இருப்பதாகவும் கூறினார். அதுவரை மதபோதகர்கள் அனைவரும் பிரம்மச்சரியம் கடைபிடிப்பவர்கள் என்று கருதிவந்த நான் என் கருத்துகளை அப்-டேட் செய்து கொண்டேன்.

அறிமுகங்கள் முடிந்த நிலையில் எங்கள் பேச்சு வேறு திசையில் சென்றது. இறையியல் பாடத்திட்டம் குறித்து தொடங்கிய விவாதம், கேரள மாநிலத்தில் உருவான விடுதலை இறையியல் (Liberation Theology) நோக்கி திரும்பியது.

அப்போது எனக்கு தோன்றிய ஒரு சந்தேகத்தை அவரிடம் கேட்டேன்: கடவுள்தான் உலகையும், மற்ற அனைத்தையும் படைத்தார் என்றால் உலகில் உள்ள சமத்துவமற்ற நிலைக்கும் அவர்தான் பொறுப்பு! இந்த சமத்துவமற்ற நிலையே அனைத்து மனித உரிமை மீறல்களுக்கும் காரணம் என்றால், இந்த சமத்துவமற்ற நிலையை உருவாக்கி, பாதுகாத்து வரும் கடவுளின் விருப்பம் அதுதான்!!இந்த நிலையில் மனித உரிமைகளை பாதுகாக்கவும், ஆதிக்கமற்ற சமூகத்தை ஏற்படுத்தும் பணியிலும் ஈடுபடுவது கடவுளின் விருப்பத்திற்கு எதிரான செயல் அல்லவா? கடவுளுக்கே எதிரான செயல் அல்லவா?? கடவுளை ஏற்றுக்கொள்பவர்கள் எந்த நோக்கத்திற்காகவும் கடவுளை தொழலாம், பிரார்த்தனை செய்யலாம். ஆனால் நேரடி செயல்பாடுகளில் ஈடுபடுவது கடவுளின் விருப்பத்திற்கு எதிரானது அல்லவா? என்று கேட்டேன்.

இது போன்ற விவாதங்கள் தாம் பயிலும் கல்வி நிலையத்திலும் அவ்வபோது நடைபெறுவதாகவும், இதுவரை இந்த கேள்விக்கான பதில் கிடைக்கப்பெறவில்லை என்றும் தோழி அனிதா கூறினார். எனினும் இந்த கேள்விக்கான பதில் தெரிந்தால் உடன் தொடர்பு கொள்வதாகவும் அவர் உறுதி அளித்தார்.

-000-

லகம் முழுவதும் மனித உரிமைத்தளங்களில் மிக அதிக அளவில் செயல்படுவது கிறித்துவ மதம் சார்ந்த அமைப்புகளும், நபர்களுமே. மிகப்பெரிய மனித உரிமை அமைப்புகள் கிறித்தவ மத நிறுவனங்களின் நிதி உதவி மற்றும் ஆலோசனை அல்லது கட்டளைப்படிதான் நடக்கின்றன.

தற்போது இஸ்லாம் மதத்தினரும் மனித உரிமைகள் குறித்து பேசுகின்றனர். ஆனால் அது சற்று வேறு விதத்தில் அமைந்துள்ளது. கிறிஸ்தவர்கள் பேசும் மனித உரிமைகள், கடவுள் மறுப்பாளர்களின் உரிமையையும் உள்ளடக்கியதாக தோன்றுகிறது. உலக அரசியல் சூழலில் இந்த கருத்தே, ஐக்கிய நாடுகளின் கருத்தாகவும் உள்ளது. ஆனால், இஸ்லாமியர்கள் பேசும் மனித உரிமைகளோ மதம் சார்ந்த நபர்களின், மத நம்பிக்கையிலேயே அதிக கவனம் செலுத்துகிறது.

கிறித்தவ மதம் இந்தியாவில் ஊடுருவி பரவ ஆரம்பித்த நிலையில், விவேகானந்தர் போன்றவர்கள் இந்து மதத்திலும் சமூக நோக்கை சேர்த்து புதிய பரிமாணங்களை ஏற்படுத்த முயற்சித்தனர்.

ஆனால் அடிப்படையில் அனைத்து மதங்களுமே கடவுள்தான் இந்த உலகத்தையும், மனிதர்களையும் படைத்தார். அவரது விருப்பப்படியே இந்த உலகிலுள்ள அனைத்தும் நடந்தேறுகிறது. என்று நம்புகின்றனர்.

எனில் ஒடுக்குபவனை படைப்பவனும், ஒடுக்கப்படுபவனை படைப்பவனும் கடவள்தான். கடவுளின் சித்தப்படியே ஒடுக்கப்படுபவன் தலித்தாக, சிறுபான்மையினராக, ஏழையாக, படிப்பறிவற்றவனாக, திருநங்கையாக, கருப்பினத்தவராக பிறக்கின்றனர்.

அதேபோல கடவுள் சித்தப்படியே மற்றோர் பிரிவினர் உயர் குலத்தவராக, வெள்ளைத்தோல் படைத்தவராக, பெரும்பான்மையினராக, செல்வந்தராக, படிப்பறிவுள்ளவராக, ஆதிக்க சக்தியினராக பிறந்து மற்றவர்களை ஆதிக்கம் செய்கின்றனர். இவர்களே அரசையும், வணிக நிறுவனங்களையும் உருவாக்கி பயன்படுத்தி, நமது மதம் சார்ந்த சமூக சேவையாளர்கள் மனம் நோகும் செயற்பாடுகளை செய்து வருகின்றனர்.

ஆக மொத்தத்தில் அனைத்தும் கடவுள் சித்தத்தாலேயே நடக்கிறது. இதனால் பாதிக்கப்படுவோருக்கு அது கடவுள் வைக்கும் சோதனை. அதனை மீறி அவர் கடவுளுக்கு விசுவாசமாக இருந்தால், அவர்களுக்கு கடவுள் முக்தியை கொடுப்பார்.

ஆனால், கடவுளின் சித்தத்தின்படி துன்பங்களை அனுபவிப்பவர்களை மனித உரிமைகள் என்ற பெயரில் அந்த துன்பங்களிலிருந்து விடுவிக்க முனைவது கடவுளின் சித்தத்திற்கு எதிரான செயல் அல்லவா? அல்லது கடவுளுக்கே எதிரான செயல் அல்லவா?

துன்பப்படு்ம் மனிதர்கள் மீது அக்கறை கொள்ளும் மத நம்பிக்கையாளர்கள், அந்த துன்பங்களை விலக்குமாறு கடவுளிடம் பிரார்த்தனை செய்யலாம். அதற்கு பதிலாக நேரடி செயல்பாடுகளில் ஈடுபடுவது ஏற்புடையதுதானா?

-என்பன போன்ற கேள்விகள் தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருக்கின்றன. நன்கு அறிமுகமான சிலரிடம இது குறித்து கேட்டபோது, எனக்கு பைத்தியம் பிடித்திருக்குமோ??!! என்ற சந்தேகத்துடன் விலகி விட்டனர்.என் கேள்வியில் உள்ள நியாயத்தை தோழி அமுதா மன்னிக்கவும் அனிதா புரிந்து கொண்டார் என்று கருதுகிறேன். மேலும் இதுபோன்ற கேள்விகள், மதபோதகர்களுக்கான பள்ளி வரையிலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது என்ற தகவலும் எனக்கு உற்சாகம் அளிக்கிறது.

-000-

என் கேள்விகளுக்கான பதில் உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள், ப்ளீஸ்...!

16 ஆகஸ்ட், 2009

ரத்த தானம் – சில நினைவுகள், சில குறிப்புகள்

த்தம் சிந்துதல் என்பது எனக்கு சிறுவயதில் அவ்வபோது நடக்கும் நிகழ்ச்சிதான். அதற்காகநானும் ரவுடிதான் என்று கூறிக்கொண்டு அலைந்ததாக நினைக்க வேண்டாம். எண்ணங்கள் எங்கெங்கோ மிதக்க, கால் தடுக்கி விழுவதும், உயரம் காரணமாக ஆங்காங்கே இடித்துக்கொள்வதுமே ரத்தம் சிந்துதலுக்கு காரணமாயின. ஆனால் அதற்கு செவ்வாய் ஆதிக்கம், பிறந்த தேதி 9 என்பது உள்ளிட்ட பல காரணங்களை பெரியவர்கள் சொல்ல ஆரம்பித்த நேரத்தில்தேவையின்றி ரத்தம் சிந்துதல் குறைந்து விட்டது.

முதல் தடவையாக பயனுள்ள முறையில் ரத்ததானம் செய்தபோது எனக்கு 18 அல்லது 19 வயதிருக்கலாம். எனது நண்பனின் தந்தையார் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது நண்பன் வேலை தேடியோ, வேறு காரணங்களுக்காகவோ வெளியூர் சென்றிருந்தான். நண்பனின் தாயாருக்கு உதவி செய்யும் நோக்கத்தில் மருத்துவமனை சென்ற நான் ரத்தம் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானேன்.

ரத்தம் எடுக்கும் பணியாளரிடம் நான் கேட்ட கேள்விகளால் நொந்துபோன அவர், உண்மையிலேயே ரத்தம் கொடுப்பதற்கு உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? இல்லையா? என்று கேட்டார். இருக்கிறது! ஆனால் நான் ரத்தம் கொடுப்பதால் நானும் பாதிக்கப்படக்கூடாது ரத்தம் பெற்றுக்கொள்ளும் என் நண்பனின் தந்தையாரும் பாதிக்கப்படக்கூடாது என்ற உண்மையான ஆர்வம் காரணமாகவே கேள்விகளை சற்று அதிகமாக கேட்டுவிட்டதாகக் கூறி படுக்கையில் படுத்து கண்களை இறுக மூடிக்கொண்டேன்.

ரத்தம் எடுத்தபின் எனக்கு சற்று அதிசயமாக இருந்தது. முன்பைவிட சுறுசுறுப்பாக இருப்பதாக தோன்றியது. எதையாவது உடனடியாக செய்யவேண்டும் என்றுகூட தோன்றியது. ரத்தம் எடுத்த மருத்துவமனை நண்பர், ரத்த தானம் செய்வதின் அவசியம் குறித்து ஒரு சிறு வகுப்பே எடுத்தார். மேலும் என் முகவரியையும் குறித்து வைத்துக்கொண்டார்.

அடுத்த ஒரு சில மாதங்களிலேயே என் சகோதரிக்கு ரத்தம் கொடுக்கவேண்டிய நிலை வந்தபோது நான் எந்த தயக்கமும் இல்லாமல், ஒருவிதமான மகிழ்ச்சியான மனநிலையில் ரத்தம் கொடுத்தேன். அதன் பிறகு அந்த மருத்துவமனையின் வாடிக்கையான ரத்தக்கொடையாளி ஆனேன். பல நாட்களில் நள்ளிரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் என்வீடு தேடிவந்து ரத்தம் கேட்டதும் உண்டு. நானும் சளைக்காமல் ஆனால் உரிய கால இடைவெளியுடன் ரத்தம் கொடுத்து வந்தேன். ஏழை நோயாளிகளுக்கு ரத்தம் கொடுத்ததுடன், அவர்களுக்கு பழம் உள்ளிட்ட அன்பளிப்புகள் அளித்ததும் உண்டு.

இதற்குள் என் நட்பு வட்டம் பெரிதாகி, ரத்தவங்கி நடத்துபவர்களும் எனக்கு நண்பர்கள் ஆனார்கள். ஆனாலும் ரத்தம் தேவைப்படும் ஒரு நோயாளிக்காக மட்டுமே ரத்தம் கொடுப்பது என்பதை கொள்கையாக வைத்திருந்தேன். ரத்த வங்கியின் கையிருப்புக்காக ரத்தம் கொடுப்பதில்லை. ஆனால் தேவைப்படும் ரத்தவகைக்கு ஈடுசெய்வதற்காக ரத்தம் கொடுக்க தயங்கியதும் இல்லை. இவ்வாறு சுமார் சுமார் 50 முறை ரத்தம் கொடுத்திருப்பேன்.

இப்போது சென்னை வந்து சுமார் 8 வருடங்கள் ஆனாலும், 5 அல்லது 6 முறை மட்டுமே ரத்தம் கொடுத்திருக்கிறேன். எனது ரத்த வகை: A1+. தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளலாம்.

-oOo-

அண்மையில் சேலத்திற்கு ஒரு விழாவிற்காக சென்றேன். அந்த விழாவை நடத்திய மருத்துவ நண்பர், ஒரு ரத்த வங்கியையும் நடத்தி வருகிறார். ரத்த வங்கி நடத்துவதில் உள்ள தொழில்நுட்ப சிரமங்களையும், மக்களின் மனநிலை கோளாறுகளையும் விளக்கினார். தொழில்நுட்ப சிரமங்களுக்கு நாம் ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் மக்கள் மனநிலையை மாற்ற முயற்சிக்கலாம்.

ரத்தம் கேட்டு வருபவர்கள் யாரும் ரத்தம் கொடுக்கத் தயாராக இருப்பதில்லை. பணம் கொடுத்தால் ரத்தம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ரத்தத்தை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்ய முடியாது என்பதை யாரும் உணர்வதில்லை. இதில் படித்தவர்களும், பணம் படைத்தவர்களும் அதிகம் இடம் பெறுகின்றனர்.

இதனால் தொழிற்முறை ரத்தக்கொடையாளிகளை வேறுவழியின்றி ஆதரிக்க வேண்டியுள்ளது. உரிய வேலைவாய்ப்பற்றும், தீய பழக்கவழக்கங்களுக்கு ஆளாகியும் உள்ள இவர்கள் பணத்திற்காக ரத்ததானம் செய்பவர்கள். இவர்களுடைய ரத்தம் போதுமான தரத்தில் இருப்பதாக கூற முடியாது.

எனவே ரத்தம் தேவைப்படுபவர்கள், இதுபோன்ற தொழிற்முறை கொடையாளிகளை தவிர்த்துவிட்டு மற்ற கொடையாளிகளை நாடுவதே நல்லது. அதற்கு அவ்வாறு ரத்தத்திற்காக நாடுபவர்களும் ரத்தக்கொடையாளிகளாக இருக்க வேண்டும். தனது ரத்தவகை என்ன என்பதே தெரியாமல், சொந்த தேவைக்காக மட்டும் ரத்தம் தேடுவது நேர்மையற்ற செயல் என்பதை உணர வேண்டும்.

-oOo-

தற்போது சில சமூக அமைப்புகள் (உ-ம்: தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம்) ரத்தக்கொடையை ஒரு முக்கியமாக சமூகசேவையாக செய்ய ஆரம்பித்துள்ளன. வரவேற்க வேண்டிய நல்ல செய்தி. ஆனால் விளம்பரத்திற்காகவும் சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு இந்த நல்லகாரியத்தை கொச்சைப்படுத்தி விடுகின்றனர்.

நமது சேலம் ரத்தவங்கி நண்பரின் அண்மைய அனுபவம் ஒன்று:

அரசியல் தலைவர் ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடத்த அந்த கட்சி முடிவு செய்தது. உள்ளூர் அமைச்சரின் வாரிசு தலைமையில் அந்த முகாம் நடத்த திட்டமிடப்பட்டது. நமது நண்பரும் ரத்ததான முகாம் நடத்த ஒப்புக்கொண்டார். குறிப்பிட்ட சில நாட்களுக்கு இரு தினங்கள் முன்பாகவே கட்சியின் குட்டித்தலைவர்கள் அந்த ரத்தவங்கியை முற்றுகையிட்டு விழா திட்டமிடலில் தீவிரமாக ஈடுபட்டனர்.

அந்த நாளும் வந்தது. கரைவேட்டிகள் அந்த பகுதியில் அலைகடலென குவிந்தனர். அமைச்சரின் வாரிசும் வந்தார். ரத்ததானம் செய்யவிருக்கும் தொண்டர்களை பாராட்டி பேசினார். பேசிய உடனே முக்கிய வேலை காரணமாக விரைந்து சென்றுவிட்டார். உடனே குட்டித்தலைவர்களும் கிளம்பினர். மெல்ல, மெல்ல மற்றவர்களும் புறப்பட்டனர். சற்று நேரத்தில் அந்த இடம் வெறிச்சோடியது. ஒருவர்கூட ரத்தம் தானம் செய்யவில்லை.

அடுத்தநாள் செய்தித்தாளில் கொட்டை எழுத்துகளில் செய்தி வந்திருந்தது: கட்சித் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு 300 தொண்டர்கள் ரத்ததானம் செய்தனர்.

-oOo-

இருக்கும்வரை தேவைப்படுவோருக்கு ரத்தம் கொடுப்போம். இறக்கும்போது அனைத்தையும் கொடுப்போம்!