09 பிப்ரவரி, 2011

கடலில் கொல்லப்படும் தமிழக மீனவர்களும், காற்றில் கரையும் இந்திய இறையாண்மையும்!

இந்தியாவில் அரசுக்கெதிரான நியாயமான விமர்சனங்களை முன்வைப்பவர்களை முடக்க அரசு அமைப்புகள் கையில் எடுக்கும்  ஆயுதம், “இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படுத்தினார்!”, “தேசப்பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தினார்!” என்ற குற்றச்சாட்டு!

ஆங்கிலேயருக்கு அடிமையாக இந்தியா இருந்த காலத்தில், “யங் இந்தியா” என்ற பத்திரிகையில் பிரிட்டிஷ் அரசை விமர்சித்து எழுதிய கட்டுரைக்காக 1922ம் மார்ச் 23ம் தேதி ஒருவர் மீது தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டது. குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர், “உங்கள் சட்டத்தின்படி இது குற்றமாக இருக்கலாம்; ஆனால் மக்களுக்கு எதிராக செயல்படும் அரசை விமர்சிப்பது ஒரு குடிமகனின் மிக உயர்ந்த கடமையாக தோன்றுகிறது!” என்று பதில் அளித்தார். அதைத் தொடர்ந்து அவர் சிறையும் சென்றார். இந்திய தேசத்தின் பிதா என்று குறிப்பிடப்படும் மோகன்தாஸ் கரம் சந்த் காந்திதான் அந்த நபர்.

வெள்ளையர்கள் ஆட்சியில் அடிமையாக இருந்த இந்தியர்களை அடக்கி ஒடுக்குவதற்காக கொண்டுவரப்பட்ட அந்த கருப்புச்சட்டம் இன்றும் நீக்கப்படவில்லை. உண்மையைச் சொல்லப்போனால் வெள்ளைக்காரர்களை விட மிகக்கொடூரமாக அந்த சட்டத்தை பயன்படுத்துவதில் இந்திய ஆட்சியாளர்கள் தேர்ந்து விட்டனர். இந்த சட்டத்திற்கு அண்மையில் பலியானவர், மக்கள் மருத்துவர் பினாயக் சென்!

இந்திய அரசியல் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள மக்கள் நலக்கொள்கைகளுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் செயல்படுவத்துவதை அம்பலப்படுத்திய அவருக்கு மத்திய, மாநில அரசுகள் கொடுத்த விருது: இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவித்ததாக குற்றச்சாட்டு மற்றும் ஆயுள் தண்டனை!

இவ்வாறு அரசின் இறையாண்மையைக் குறித்து கவலை கொள்ளும் ஆட்சியாளர்களுக்கு உண்மையிலேயே நாட்டின் இறையாண்மை மற்றும் மக்களின் மனித உரிமைகள் குறித்த அக்கறையோ, பொறுப்புணர்வோ இருக்கிறதா என்று பார்த்தால் வேதனையே மிஞ்சுகிறது.

இறையாண்மை கொண்டுள்ளதாக கூறிக்கொள்ளும் ஒரு நாட்டின் குடிமக்களை அண்டை நாட்டு ராணுவம் தொடர்ந்து படுகொலை செய்தாலும் அது குறித்து மயிரளவும் சிந்திக்காமல் செயலற்று இருக்கும் ஒரு அரசு, தன்னை விமரிசிப்போரை மட்டும் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டுவது குரூரமான நகைச்சுவையாகும்.

இந்தியாவிற்கும், இலங்கைக்கும் அருகே கடல் பகுதியில் இந்த கட்டுரை எழுதப்படும் தினம் வரை கொல்லப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை: 539. இலங்கையின் இனவெறி சிங்கள ராணுவத்தால் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் கொல்லப்படும் சம்பவங்கள் 1975ம் ஆண்டு முதலே நடந்து வருகின்றன. 1983ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டுவரை 378 தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் உரிமைச் சட்டத்தின்படி கேட்டபோது தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

தமிழகத்தை சேர்ந்த மீனவர் நடுக்கடலில் கொல்லப்பட்டவுடன், கடலோர மாவட்டங்களிலுள்ள காவல் நிலையங்கள் முதல் தகவல் அறிக்கையைப்  (எஃப்.அய்.ஆர்.) பதிவு செய்கின்றன. இந்திய ஆயுதச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 307வது பிரிவின் கீழ் இலங்கை கப்பல் படையினருக்கு எதிராகவே பதிவு செய்யப்படுகின்றன. சம்பவம் நடந்த இடமும், கச்சத் தீவு அருகே உள்ள இந்திய கடல் பகுதி என்றே முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்படுகிறது.
.
இந்த சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளி, சம்பவம் நடந்த இடம் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த அடுத்த சில மாதங்களிலேயே குற்றம் சாட்டப்பட்டவரை கண்டறிய முடியவில்லை என்று கூறி “நடவடிக்கை கைவிடப்படுகிறது”  என்ற குறிப்புடன் வழக்குகள் முடிக்கப்பட்டுவிடுகின்றன.

நடுக்கடலில் நடக்கும் படுகொலைகள் குறித்து புகார் அளித்தவருக்கே தகவல் அளிக்காமல் வழக்கை முடிக்க அனுமதிப்பது நீதித்துறை நடத்தும் படுகொலை.

இது குறித்து கேள்வி எழுப்பினால் மத்திய, மாநில அரசுகளை சேர்ந்தவர்கள் “தமிழக மீனவர்கள் பேராசை காரணமாக இந்திய கடல் எல்லையை தாண்டிச் சென்று மீன் பிடிக்கின்றனர்” என்று கூறுகின்றனர்.

தமிழக மீனவர்கள் இந்திய எல்லையை தாண்டிச் செல்ல வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகளே முக்கிய இடம் வகிக்கின்றன. இந்திய கடல் எல்லைப்பகுதியில் சர்ச்சைக்குரிய சேது சமுத்திர திட்டம் உள்ளிட்ட தொழிற்திட்டங்களால் ஏற்படும் சூழல் சீரழிவுகளால் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் மீன் வளம் குறைகிறது. மேலும் இப்பகுதியில் அதிக முதலீடு பிடிக்கக்கூடிய மீன்பிடி கப்பல்களை அனுமதிப்பதால்  கட்டுமரத்திலும், சிறுவிசைப்படகுகளிலும் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு மீன் கிடைக்காமல் அவர்கள் பிழைப்புக்காக இந்திய கடல் எல்லையை தாண்டும் நிர்பந்தம் ஏற்படுகிறது.

அவ்வாறே தமிழ்நாட்டு மீனவர்கள் நாட்டின் கடல் எல்லையை தாண்டிச் சென்று மீன் பிடித்தாலும்கூட  அந்த மீனவர்களை சுட்டுக்கொல்லலாம் என்று இலங்கை உட்பட எந்த ஒரு நாட்டின் சட்டமும் சொல்லவில்லை. சர்வதேச சட்டமும் அதை அங்கீகரிக்கவில்லை என்பதை மத்திய மாநில அரசு சார்ந்தவர்கள் கூறுவதில்லை.
.
இந்தப் பிரசினை குறித்து  இந்திய தேசிய பாதுகாப்புக் குழுவின் முன்னாள் ஆலோசகரான  திரு. சூரிய நாராயணன் , “உலகம் முழுதும் மீனவர்கள் கடல் எல்லைகள் பற்றி கவலைப்படுவதில்லை. இலங்கை மீனவர்கள் இந்திய கடல் பரப்புக்குள்ளும் மாலத்தீவு கடல்பரப்புக்குள்ளும் மீன் பிடிக்கிறார்கள். இந்திய மீனவர்கள் இலங்கை, பாகிஸ்தான், கடல்பரப்புக்குள் நுழைகிறார்கள். வங்கதேச மீனவர்கள் மியான்மார் கடல் பரப்புக்குள் நுழைகிறார்கள். சர்வதேச கடல் எல்லைகளுக்கான அய்.நா. சட்டத்தின் 73 மற்றும் 145 வது பிரிவுகள் இப்படி எல்லை தாண்டுவதை சிவில் குற்றம் என்றே கூறுகின்றன. கிரிமினல் குற்றமாகக் கூறவில்லை” என்று தெளிவாக கூறுகிறார்.
.
இந்தியாவைப் பொறுத்தவரை பாகிஸ்தானை எதிரி நாடாகவும், இலங்கையை நட்பு நாடாகவும் கருதுகிறது. எதிரி நாடாக கருதப்படும் பாகிஸ்தானின் கடல் எல்லைக்குள் மீன் பிடிப்பதற்காக செல்லும் எந்த மீனவரும் இதுவரை கொல்லப்பட்டதில்லை. ஆனால் நட்பு நாடான இலங்கை ராணுவமோ தமிழ்நாட்டு மீனவர்களை கொன்று குவிக்கிறது.

இந்தப்படுகொலைகள் குறித்து சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தி தொடரப்பட்ட பொதுநல வழக்கில் மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கேட்ட கேள்வி இதுதான்: “இலங்கை கடற்படை தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்கிறது என்பது உண்மைதான். இதற்காக இலங்கை மீது இந்தியா போர் தொடுக்க முடியுமா?” இந்த கேள்வி மத்திய அரசு வழக்கறிஞரின் கேள்வி மட்டுமல்ல! இந்திய அரசும் இதைத்தான் கேட்கிறது. இதுதான் இன்றைய நிலையில் இந்தியாவின் இறையாண்மை!


இலங்கை போன்ற அண்டை நாடுகளிடமும், அமெரிக்கா போன்ற ஆதிக்க நாடுகளிடமும், உலக வர்த்தக ஒப்பந்தம் என்ற பெயரில் போடப்பட்ட அடிமைச் சாசனத்தின்படி பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களிடமும் நிலைநாட்ட முடியாத இந்தியாவின் இறையாண்மையை, மக்கள் உரிமைகளுக்காக போராடும் இந்தியாவின் குடிமக்கள் சிலர் அழிக்கப் பார்க்கிறார்கள் என்று வழக்கு தொடுக்கப்படுகிறது. நீதிமன்றங்களும் அதற்கு துணை போகின்றன.

குடிமக்களை பாதுகாப்பதற்குதான் அரசு என்ற அமைப்பு: அரசு செயல்படுவதை கண்காணிக்கவும், செயல்படாத அரசை செயல்படுமாறு உத்தரவிடவும்தான் நீதிமன்றங்கள்.
.
குடிமக்களின் மனித உரிமைகளை பாதுகாக்கவியலாத அரசுக்கு இறையாண்மை குறித்து பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. அதேபோல அரசு இயற்றிய சட்டத்தை அந்த அரசே பின்பற்ற மறுப்பதை தட்டிக்கேட்காத நீதித்துறை மக்களின் நம்பிக்கையை இழப்பதும் இயல்பானதே! இத்தகைய நாடுகளை சர்வாதிகார, மக்கள் விரோத நாடு என்றே வரலாறு பதிவு செய்யும்.
.
அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி நடக்கவேண்டிய முதன்மை கடமை அரசுக்கே உள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக நடந்துகொள்ளும் ஒரு நாடு, மக்கள் மட்டும் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.
.
“சமூக – பொருளாதார சமத்துவம் தொடர்ந்து மறுக்கப்பட்டால், அதனால் பாதிக்கப்படுபவர்கள் செயலற்று, சும்மா இருந்து விட மாட்டார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு அரும்பாடுபட்டு உருவாக்கிய இந்த அரசியல் ஜனநாயக அமைப்பை, இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சுக்குநூறாக தகர்த்து எறிவார்கள்!” என்ற இந்த வாசகம் நக்ஸல்பாரி அமைப்பைச் சேர்ந்த வெளியீடுகளில் இருந்து எடுக்கப்பட்டதல்ல. இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழுவின் தலைவராக பணியாற்றிய மேதை பி. ஆர். அம்பேத்கர், இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழுவின் கூட்டத்தில் 1949ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி உரையாற்றியபோது இவ்வாறு கூறியுள்ளார்.
.
தங்களது தேவைகளுக்கு மட்டும் அம்பேத்கரை பயன்படுத்திக்கொள்ளும் இன்றைய அரசு அமைப்புகள் அம்பேத்கரின் மேற்கூறிய வாசகத்தை மறந்து விடலாம். ஆனால் இந்த அரசால் வஞ்சிக்கப்படும் மக்கள் அம்பேத்கரையோ, அவரது வாசகங்களையோ மறந்துவிட மாட்டார்கள்.

02 ஜனவரி, 2011

ஜனநாயகத்தின் நான்காவது தூண் – சரிகிறதா?

மக்களாட்சி நடைமுறையின் மூன்று தூண்களான நாடாளுமன்றம் சட்டமன்றம், அதிகார வர்க்கம், நீதித்துறை ஆகியவை எப்படி இயங்குகின்றன? என்பது சராசரி இந்தியனுக்கு வெளிப்படையாகத் தெரியும். ஆனால் நான்காவது தூண் என்று கூறப்படும் ஊடகத்துறை எவ்வாறு இயங்குகிறது? என்பது சாமானியர்களின் கண்களுக்கு புலப்படுவதில்லை.

மக்களின் நம்பிக்கைகளையும், கருத்துகளையும் உளவியல் ரீதியாக உருவாக்கும் சக்தி ஊடகங்களுக்கு உள்ளது. உலகில் நடைபெற்ற எந்த அரசியல் மாற்றத்திலும் ஊடகங்களின் பங்கும் உரிய அளவில் இருக்கும்.

இந்திய சுதந்திரப்போரின்போது இந்தியாவுக்கான ஊடகங்கள் உருவாகின என்று சொல்லலாம். தமிழ்நாட்டிலும் ஈவெரா பெரியாரின் வரவையடுத்து ஊடகங்கள் முன்னின்று ஒரு கலாசார, பண்பாட்டு, மொழி்ப்புரட்சியை உருவாக்கின.

அந்தச் சூழ்நிலையில்தான் பாவேந்தர் பாரதிதாசன் ஊடகம் குறித்து,

காரிருள் அகத்தில் நல்ல
கதிரொளி நீ தான்! இந்தப்
பாரிடைத் துயில்வோர் கண்ணில்
பாய்ந்திடும் எழுச்சி நீ தான்!
ஊரினை நாட்டை இந்த
உலகினை ஒன்று சேர்க்கப்
பேரறிவாளர் நெஞ்சில்பிறந்த பத்திரிகைப் பெண்ணே

...என்று பாடினார்.

*****


பேரறிவாளர் நெஞ்சில் பிறந்த பத்திரிகைப் பெண் தற்போதைய சூழலில், மக்களுக்கு ஏற்கனவே இருக்கும் அறிவை வளர்க்கிறாளா? அல்லது அந்த அறிவையும் அழிக்கிறாளா? என்ற கேள்வி கேட்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

இந்நிலைக்கு ஊடக நிறுவனங்கள், செய்தியாளர்கள், செய்தியாளர் அமைப்புகள், வாசகர்கள் ஆகிய அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.

ஊடக நிறுவனங்கள்

இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பின்னர் இந்திய ஊடகங்கள் அனைத்தும் வணிக நிறுவனங்களாயின. வணிக நிறுவனங்களுக்கே உரிய லாபநோக்குடன் அவை செயல்படத் தொடங்கின. எனவே மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது போன்ற அறம் சார்ந்த கோட்பாடுகள் மறைந்து மக்களை எப்படியாவது கவர்ந்து விற்பனையை பெருக்கி லாபம் ஈட்ட வேண்டும் என்ற போக்கு ஏற்பட்டது. அப்போதும் சில பத்திரிகை அதிபர்கள் லாபத்தோடு, தங்கள் இனம் சார்ந்த நுண்ணரசியலுக்கும் இந்த பத்திரிகைகளை பயன்படுத்திக் கொண்டனர். பெரியார் மண் என்று கூறிக்கொள்ளும் தமிழ்நாட்டில் இந்தப்போக்கு சற்று குறைவு என்றாலும் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது.

தற்போதைய சூழ்நிலையில் அரசியல் கட்சிகளே ஊடகங்களையும் ஆக்கிரமித்து மக்களுக்கு நடுநிலை செய்திகளே கிடைப்பதில்லை என்ற சூழல் நிலவுகிறது. நடுநிலை செய்திகளுக்கே பஞ்சம் என்றால் நாட்டு நடப்பு குறித்த நடுநிலையான விமர்சனங்களுக்கு இன்றைய ஊடகங்களில் இடமே இல்லை என்றும் சொல்லலாம். அனைத்து ஊடகங்களும் கண்களுக்கு தெரியாத சிலந்தி வலைகளில் மாட்டிக் கொண்டுள்ளன. அவை அரசியல் வலையாகவோ, வணிக வலையாகவோ, அல்லது வேறு வலையாகவோ இருக்கலாம். எனவே இந்த ஊடகங்களில் பணியாற்றும் மனசாட்சியும், செயல்திறனும் வாய்ந்த செய்தியாளர்கள்கூட ஒரு அம்சத்தை அலசும்போது, தாங்கள் சார்ந்த ஊடக நிறுவனத்தை அந்த விமர்சனம் எவ்வாறு பாதிக்கும் என்பதை கணித்துவிட்டே எழுத வேண்டிய நிலை உள்ளது.

பெரும்பாலான வணிக ஊடகங்கள் சுயமாக சிந்திக்கும் திறன்பெற்ற செய்தியாளர்களை பணிக்கு அமர்த்த விரும்புவதில்லை. தாம் சொல்லும் வேலையை செவ்வனே செய்யக்கூடிய திறன் பெற்றவர்களை மட்டுமே ஊடக நிறுவனங்கள் விரும்புகின்றன. எனவே சிந்திக்கத் தெரிந்தவர்கள்கூட ஒன்றும் தெரியாதவர்கள்போல நடிக்கும் சூழல் நிலவுகிறது. காலப்போக்கில் அவர்கள் சிந்தனைத்திறனும் மறைவது இயல்பானதே!

செய்தியாளர்கள்

செய்தியாளர்களை இருவகைகளாக பிரிக்கலாம். ஊடகத்துறையின் மகத்துவத்தை உணர்ந்து மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் என்று வருவது ஒரு வகை. ஊடகவியல் சார்ந்த படிப்புகளை படித்துவிட்டோ, அல்லது வேறு வகையிலோ ஊடகத்தை பிழைப்புக்கான ஒருவழி என நினைத்து இந்தத் துறையில் நுழைவது மற்றொருவகை.

முதல் வகையினருக்கு வாழ்க்கை சிறிது கடினமாகவே இருக்கும். ஏனெனில் அவர்கள் உருவாக்கும் செய்தியின் மறுபக்கம் என்ன என்பது அவர்களுக்கு தெரியும். உண்மையின் ஒரு பக்கத்தை மட்டுமே மக்களுக்கு கொடுக்கிறோம் என்ற குற்ற உணர்வுக்கு அவர்கள் ஆளாக நேரிடலாம். ஆனால் அதற்கு மாற்று வழியற்ற சூழலில், காலப்போக்கில் அந்த குற்ற உணர்வு அவர்களுக்கு மரத்துவிடும்.

இரண்டாம் வகையினருக்கோ இதுபோன்ற சிரமங்கள் இருக்காது. மேலும் ஊடகத்துறைக்கு மக்களிடம் இருக்கும் ஒரு போலித்தனமான, அர்த்தமற்ற மரியாதை இவர்களுக்கு போதையைத் தரும். இந்த போதையில் இவர்கள் சமூகத்தை கற்க தவறுவதும் இயல்பாக நடைபெறுகிறது. தொழில் நிமித்தமான அறிமுகங்கள் அதிகரிக்கும் நிலையில், அந்த அறிமுகத்தின் மூலம் சொந்த காரியங்களை சாதித்துக் கொள்ளும் கலையை இவர்கள் எளிதில் கற்றுக்கொள்வர். இந்த நிலையை எய்திய ஒரு செய்தியாளரிடம் எந்தவிதமான சமூக பொறுப்பையும் எதிர்பார்க்கமுடியாது.

ஆனால் இவர்கள் இவ்வாறு மாறுவதற்கு இந்த செய்தியாளர்கள் மட்டுமே காரணம் என்றும் சொல்லமுடியாது. மிகக்குறைந்த ஊதியத்தை வழங்கும் ஊடக நிர்வாகம், இதை கண்டும் காணாமல் இருக்கும் அரசு ஆகியவையும் இதுபோன்ற செய்தியாளர்கள் உருவாக முக்கிய காரணமாக இருக்கின்றன.

செய்தியாளர் அமைப்புகள்

செய்தியாளர்களுக்கு பாதுகாப்பும், பயிற்சியும் கொடுப்பது, அவர்களுக்கு சமூகம் சார்ந்த கல்வி அளிப்பது, ஊடகத்தை செம்மையாக பயன்படுத்தி சமூக மேம்பாட்டுக்கு உதவி செய்வது போன்றவற்றில் செய்தியாளர் அமைப்புகள் ஈடுபடவேண்டும்.

ஆனால் செய்தியாளர் அமைப்புகளின் செயல்பாடுகளோ மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாகவே இருக்கின்றன. பத்திரிகையாளர் சங்கத்தை பிழைப்பதற்கான வழியாக நடத்துவது: சரியான கொள்கைகளோ, பார்வைகளோ இல்லாமல் தனிநபர் கருத்து சார்ந்து அமைப்புகளை நடத்துவது: தனிநபர் ஈகோ மோதல்களால் அமைப்புகளை முடக்குவது, பிளப்பது போன்ற நடவடிக்கைகளே அதிக அளவில் நடைபெறுகின்றன.

இதையெல்லாம் மீறி யாராவது முறையான அமைப்புகளை நடத்தினால் அதை ஊடக நிர்வாகங்கள் எவ்வாறு எதிர்கொள்ளும் என்பது சுவாரசியமான கற்பனையாக அமையும்.

வாசகர்கள்

ஊடக வாசகர்களின் மனநிலை என்பது சராசரி வாக்காளரின் மனநிலையே! நாட்டில் நடப்பவை தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்றாலும், தம்மால் ஒன்றும் செய்யமுடியாது என்ற முன்முடிவோடு ஒருவிதமான மோனநிலையில் ஆழ்ந்துவிடுவது.

ஊடகங்களில் நல்ல அம்சங்கள் வரும்போது பாராட்டுவதும் கிடையாது. தீய அம்சங்கள் வரும்போது கண்டிப்பதும் கிடையாது. (விதிவிலக்குகள் தவிர!)

*****

மரபு சார்ந்த இந்த ஊடகத்திற்கு வெளியே மரபு சாராத புதிய ஊடகங்களாக இணையங்கள் செயல்படுகின்றன. மரபு சார்ந்த அச்சு ஊடகத்திற்கோ, காட்சி ஊடகத்திற்கோ தேவையான முதலீடுகள் தேவையில்லாததால் நவீன ஊடகங்களில் மாற்று முயற்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஆனால் இந்த நவீன இணைய ஊடகத்திற்கான வாசகப்பரப்பு மிகவும் குறைவு. மேலும் இந்த வாசகர்களும் மரபு சார்ந்த ஊடகங்கள் உருவாக்கிய வாசகத்தன்மையை கொண்டவர்கள். எனவே மாற்று அம்சங்கள் மற்றும் பார்வைகள் இங்கே கவனம் பெறுவதில் பெரும் சிக்கல்கள் உள்ளன.

இந்த இணையப் பெருவெளியில் ஒரு மாற்றுக் கருத்தை முன் வைத்து அதை பலரும் கவனிக்கச் செய்வதற்கே பெரும் முயற்சி தேவைப்படுகிறது. அந்த முயற்சியில் ஆள்பலம், பணபலம் ஆகிய அனைத்தும் இடம் பெறுகின்றன.

*****


இந்நிலையை மாற்றுவதில் மனசாட்சி உள்ள பத்திரிகையாளர்களும், சமூகப் பொறுப்பு உள்ள வாசகர்களும் இணைந்து செயல்பட்டால் வெற்றி காணமுடியும்.

ஊடகத்தில் வெளியாகும் அனைத்து செய்திகளுக்கும் பின்னால் இருக்கும் சொல்லப்படாத செய்திகளை மக்கள்முன் வைப்பதற்கு நவீன ஊடக வடிவங்களை மனசாட்சி உள்ள செய்தியாளர்கள் பயன்படுத்த வேண்டும். இதை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்ப்பதில் சமூகப்பொறுப்புமிக்க வாசகர்கள் ஈடுபட வேண்டும்.

மேலும் குடிமக்கள் இதழியல் என்ற கருத்து பரவலாகி வரும் நேரம் இது! இதனை குடிமக்கள் அனைவரும் முறையாக பயன்படுத்தும்வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

வணிகப்பத்திரிகைகளில் நல்ல அம்சங்கள் வெளியிடப்பட்டால் அதைப் பாராட்டவும், தவறான அம்சங்கள் வெளியிடப்பட்டால் அதை கண்டிக்கவும் மீடியா வாட்ச் போன்ற அமைப்புகள் உருவாக வேண்டும். 

தீயதை பார்க்காதே! தீயதை கேட்காதே! தீயதைப் பேசாதே! என்பதெல்லாம ஊடகங்களுக்கு பொருந்தாது. ஊடகங்கள் தீயதை பார்க்க வேண்டும்! தீயதை கேட்க வேண்டும்! தீயவை குறித்து உரக்கப் பேச வேண்டும்!

பின் மக்களோடு இணைந்து தீயவைக்கு எதிராக போராட வேண்டும்!