29 ஜனவரி, 2013

சட்டத்தின் முன் அனைவரும் சமம்!

புதுவை அரசுப் பேருந்து பாண்டிச்சேரியிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. கிழக்கு கடற்கரைச் சாலையில் அந்தப் பேருந்து வந்து கொண்டிருந்தபோது பனையூர் அருகே இளைஞர்கள் சிலர் அந்தப் பேருந்தில் ஏறியுள்ளனர். பயணச்சீட்டு வாங்குவதில் பேருந்தின் நடத்துனருக்கும், சில பயணிகளுக்கும் லேசான கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. உடனே பேருந்தின் ஓட்டுனர் பேருந்தை நீலாங்கரை காவல் நிலையத்திற்கு செலுத்தியுள்ளார். பேருந்தின் நடத்துனர் காவல்துறை அதிகாரிகளை அணுகி பயணிகள் சிலர் தம்மிடம் தகராறு செய்வதாக புகார் செய்யவே, காவல்துறை அதிகாரிகள் விசாரித்துள்ளனர். பேருந்தின் நடத்துனரிடம் புகார் ஒன்றை எழுதி வாங்கிய காவலர்கள், புகாருக்குள்ளான இளைஞர்களிடமும் மன்னிப்பு கடிதம் ஒன்றை எழுதி வாங்கியுள்ளனர். பிறகு அந்த இளைஞர்களை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். இந்த விவகாரம் இதோடு முடிந்து விட்டதாக அனைவரும் அவரவர் வீடுகளுக்கு திரும்பி விட்டனர். 

இந்நிலையில் கிழக்கு கடற்கரை சாலையோர கிராமம் ஒன்றில் வசிக்கும் ஸ்ரீதர் என்பவருக்கு நீதிமன்றத்தில் இருந்து அழைப்பாணை ஒன்று சென்றுள்ளது. மேற்குறிப்பிட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், இந்த தற்போது விசாரணைக்கு வருவதாகவும், விசாரணை நாளில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அந்த அழைப்பாணை தெரிவிக்கிறது. 

தற்போது விசாரணை துவங்கியுள்ள இந்த சம்பவம் எப்போது நடந்திருக்கும் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா? அதிகமில்லை ஜென்டில்மேன்! சுமார் 10 ஆண்டுகள். அவ்வளவே!

இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள புகாரின் சுருக்கத்தைப் பார்ப்போம். 

“நான் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டு இருந்தேன். மாலை சுமார் 5 மணியளவில் பனையூர் அருகே வரும்போது பின்னால் பெயர் தெரிந்த ஸ்ரீதர் என்ற பயணி என்னிடம் இரண்டு டிக்கெட் வாங்கியிருந்தார். அவர் மூன்று டிக்கெட் வாங்கியதாக என்னிடம் தகராறு செய்து என்னை வேலை செய்ய விடாமல் தடுத்தும் கையால் என் முகத்தில் அடித்து விட்டார். ஓட்டுனர் பேருந்தை நிறுத்திவிட்டு என்னிடம் வந்தபோது அவர் பேருந்திலிருந்து இறங்கிவிட்டார்”

இந்தப் புகாரையடுத்து புகாருக்குள்ளானவர்மீது, "பொது ஊழியரை அவரது கடமையிலிருந்து தடுக்க காயம் விளைவித்தல்" என்ற குற்றவியல் பிரிவினை பயன்படுத்தி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் புகார்தாரரான நடத்துனர் புதுவைக்காரர். சாட்சிகளில் ஒருவரான பேருந்து ஓட்டுனரும் புதுவைக்காரர். அந்த பேருந்தில் பயணம் செய்த இருவர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் புதுவைக்காரர். மற்றொருவர் சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர். இவர்கள் யாருக்கும் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்ரீதரை அடையாளம் தெரிவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. ஆனால் காவல் நிலையத்தில் அவர்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்குமூலத்தில் குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தை பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்கள் உள்ளன. 

இந்த வழக்கின் விசாரணைக்கு எத்தனை சாட்சிகள் தற்போது நேரில் வருவார்கள் என்பது தெரியவில்லை. இந்த வழக்கின் போக்கு என்னவாகும் என்பதெல்லாம் இருக்கட்டும். 

இந்த வழக்கின் புகார்தாரரான நடத்துனரின் முகத்தில் (சட்ட மொழியில்) எதிரி அடித்து விட்டார் என்று கூறப்பட்டுள்ளது. காயத்தின் தன்மை குறிப்பிடப்படாததால், (இந்த சம்பவம் ஒரு வேளை உண்மையாகவே நடந்திருந்தாலும்கூட) காயம் ஏதும் ஏற்படவில்லை என்று கருதலாம்.

ஒரு வேளை இந்த வழக்கில் நடத்துனரை அடித்தவர் ஏதோ ஆயுதத்தால் தாக்கி, அந்த நடத்துனருக்கு காயமோ, அங்கவீனமோ ஏற்பட்டிருந்தால்கூட வழக்கு இதே வேகத்தில்தான் (சுமார் 10 ஆண்டுகள்) நடைபெறும். அப்படி நடந்தால் புகார்தாரரையும், சாட்சிகளையும் (ஒருவேளை அவர்கள் நீதிமன்ற விசாரணைக்கு நேரில் வந்தால்) புகாருக்கு உள்ளானவரின் வழக்கறிஞர் கேள்விகளால் வறுத்தெடுத்து விடுவார். மேலும் 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் குறித்த நினைவுகளை மீட்டெடுத்து  நீதிமன்றத்தில் சாட்சி சொல்வது யாருக்கும் எளிதல்ல. 

மிகச்சாதாரணமான இந்த வழக்கை நடத்த 10 ஆண்டுகால தாமதம் ஏன்? அரசு வழக்கறிஞர்களுக்கு பஞ்சமா? இல்லை, வழக்கறிஞர்களுக்கே பஞ்சமா? நிச்சயமாக இது காரணமாக இருக்க முடியாது.

எனில் இந்த வழக்கு நடப்பதால் யாருக்கு லாபம்?

இது போன்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவரை, அவர் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டு அபராதம் செலுத்திவிட்டு செல்லுமாறு காவல்துறையினர் வலியுறுத்துவது வழக்கம். அப்போதுதான் காவல்துறையினரின் பணிச்சுமை குறையும். ஆனால் ஒருமுறை குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டுவிட்டால் குற்றம் சாட்டப்பட்டவர் மீது அடுக்கடுக்காக வழக்குகளும் பாயலாம். இதெல்லாம் நடக்காவிட்டால்கூட இந்த வழக்குக்காக குற்றம் சாட்டப்பட்டவர் இழக்கும் நேரமும், பணமும் ஒரு சுமைதான்.

இதெல்லாம் இருக்கட்டும். மேற்கூறப்பட்ட புகாரில் கூறப்பட்ட சம்பவங்கள் உண்மையாகவே இருந்தாலும், இந்த (ஆமை) வேகத்தில் வழக்கு நடந்தால் குறிப்பிட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்? அல்லது தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும்? இதில் "தாமதமாக வழங்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமம்!" என்ற வசன காவியங்கள் வேறு..!

இது ஒரு சிறிய உதாரணம்தான். நாட்டில் நடக்கும் கோடிக்கணக்கான வழக்குகள் இப்படித்தான் நடக்கின்றன.

சாமானியர்களின் வழக்குகள் இப்படி இருக்கையில், ரிலையன்ஸ் அம்பானி போன்ற தொழிலதிபர்களின் குடும்ப சச்சரவுகள் குறித்த வழக்குகளையும், கமலஹாசன் போன்ற திரையுலக பிரபலங்களின் வழக்குகளையும் நமது மாண்புமிகு நீதியரசர்கள் ஓவர்டைம் போட்டு விசாரித்து நீதி வழங்கும்போதுதான் “சட்டத்தின் முன் அனைவரும் சமம்!” என்ற சட்ட முதுமொழி நினைவில் வந்து தொலைக்கிறது..!

26 டிசம்பர், 2012

சுனாமி: சில நினைவலைகள்

2004ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாள். காலை 6 முதல் மதியம் 2 மணிவரை எனக்குப் பணி. பனியும், குளிரும் நிறைந்த அதிகாலையில் கிளம்பி அலுவலகம் வந்தேன். தீவுத்திடல் அருகே உள்ள ராணுவ மைதானத்தில் நடக்கும் ஒரு விளையாட்டு விழாவை செய்திக்காக கவர் செய்ய வேண்டும். 


அலுவலகத்தின் மூன்றாவது மாடியில் இருந்த கழிப்பறையில் சிறுநீரைக் கழிப்பதற்காக பேண்ட்டின் ஜிப்பை திறந்தபோது நான் நின்ற அலுவலகத்தின் சுவர்கள் சிறிது குலுங்குவதாக தோன்றியது. அது உண்மைதானா என்று சுதாரிப்பதற்குள் அருகே இருந்த காமெரா அறையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடுவது தெரிந்தது. நான் செல்லும் செய்திக்கான காமெரா நண்பரை தேடினேன். அவர் தொலைபேசி மூலம் என்னை அழைத்து அலுவலகத்திற்கு வெளியே காத்திருப்பதாக கூறினார். 


லிப்டிற்கு விரைந்தேன். அனைவரும் படிக்கட்டு மூலம் இறங்கிக் கொண்டிருந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்டால் லிப்ட் பழுதாகி விடுமாம். அவர்களின் புத்திசாலித்தனத்தை கண்டு வியந்து கொண்டே படிமூலம் கீழே இறங்கினேன். என்னுடன் வரவேண்டிய காமெரா நண்பர், அலுவலகக் கட்டிடத்திலிருந்து சற்று விலகி நின்று அலுவலகக் கட்டிடத்தை படம் பிடிக்க ஃபோகஸ் செய்து கொண்டிருந்தார். ஏன் என்று கேட்டபோது, “நிலநடுக்கத்தில் அலுவலக கட்டிடம் இடிந்து விழுந்தால் அதை பதிவு செய்ய வேண்டாமா?” என்று அப்பாவியாய் கேட்டார். 


அவரை வாகனத்தில் இழுத்துப்போட்டுக் கொண்டு ராணுவ மைதானத்திற்கு சென்றேன். அங்கிருந்த வாயிற்காப்போன் இந்தியில் ஏதேதோ கேட்க, எனக்கு தெரிந்த அரைகுறை ஹிந்தியில், “முஜே ஹிந்தி பில்குல் நை மாலும்!” என்று சொல்ல, பாகிஸ்தான் தீவிரவாதியை கண்ட விஜயகாந்த் போல் கண்சிவந்து மேலும் கத்தினார், அந்த ராணுவ வீரர்! 


இது ஆகாது என்று முடிவு செய்து, வண்டியை திருப்பியபோது அலுவலகத்தில் இருந்து மற்றொரு செய்தியாளர் காயத்ரி அழைத்தார். பட்டினப்பாக்கம் பகுதியில் கடல் கொந்தளித்து பெரும் பிரசினையாகி இருப்பதாகவும், இருக்கும் ஒரே காமெரா நிபுணரை நான் அழைத்துவந்து விட்டேன்: எனவே உடனடியாக அலுவலகம் வந்து அவரையும் அழைத்துக் கொண்டு பட்டினப்பாக்கம் செல்லவேண்டும் என்றும் வழக்கம்போல அவசரப்பட்டார். 


ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசலற்ற சாலையில் ராக்கெட் வேகத்தில் அலுவலகம் சென்று செய்தியாளர் காயத்ரியை வாகனத்தில் அள்ளிப் போட்டுக்கொண்டு பட்டினப்பாக்கம் சென்றேன். 


பட்டினப்பாக்கம் சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கும்போதே, அந்த சாலை வரை கடல்நீர் வந்ததற்கான அறிகுறிகள் தெரிந்தன. உள்ளே தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் வீடுகளை கடந்து சென்றோம். திரைப்பட காட்சிகளில் வருவதுபோல மக்கள் ஊரை காலி செய்து வெளியேறிக் கொண்டிருந்தனர். அம்மக்கள் தலையில் வைத்து சுமந்து வந்த சொத்துகளில் முக்கிய இடம் வகித்தது, தொலைக்காட்சி பெட்டி! 

ஆனால் அம்மக்களில் சிலருக்கோ எங்கள் குழுவினர் மேல் காரணமற்ற கோபமும் வந்தது. இந்த .....டிவிக்காரன் இங்கேயும் வந்துட்டானுங்க.. அடிங்கடா.. என்ற குரல் வந்தது. மைக்கில் இருந்த தொலைக்காட்சி சின்னத்தை கழட்டி மறைத்துக் கொண்டு முன்னேறினோம். கால்களில் ஏதேதோ இடறின. சாலை ஓரங்களில் வயதான மனிதர்களின் பிணங்கள் கூட இருந்தது. 


தமிழ்நாட்டு வீட்டுவசதி வாரியத்தின் வீடுகளில் தரைத்தளத்தில் இருந்த வீடுகளில் கடல்நீர் தாக்குதல் நடத்தியிருந்தது. அந்த கட்டிடங்களின் மேல் மாடிகளில் ஏராளமானவர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்பகுதியை தாண்டினோம். அங்கேதான் அந்த பேரவலத்தைக் கண்டேன்.
.
மீனவர்கள் வசிக்கும் குடிசைப்பகுதிகளை முற்றிலுமாக அழித்திருந்தது, கடல். சிறுவர்களும், வயதானவர்களும், நோயாளிகளும் ஏராளமான எண்ணிக்கையில் உயிரை பலி கொடுத்திருந்தனர். கீற்றினால் வேயப்பட்ட குடிசைகள் சின்னாபின்னமாகி இருந்தன. 


அந்தப்பகுதியில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த தனியார் கல்லூரி ஒன்றின் பேருந்துகள், கடல் அலைகளால் அலேக்காக தூக்கி பல மீட்டர் தூரம் தாண்டி போட்டிருந்தன. அப்பகுதியில் இருந்த கோவில் ஒன்றின் வாசலுக்குள் பாதி புகுந்த நிலையில் ஒரு பேருந்து இருந்தது. 


அந்த பேருந்தின் மேல் ஏறி சுனாமி பாதித்த அவலக் காட்சிகளை படம் பிடித்தோம். 


அத்தனை சடலங்களை ஒரே நேரத்தில் பார்த்து அனுபவமில்லாத சக செய்தியாளர் காயத்ரி மன உளைச்சல் தாங்காமல் புலம்ப ஆரம்பித்தார். சுமார் ஒரு மணி நேரம் செலவழித்து ஏராளமான காட்சிகளை படம் பிடித்துக்கொண்டு அலுவலகம் திரும்ப திட்டமிட்டோம். அதுவரை எனக்கு சுனாமி என்ற சொல் அறிமுகமே கிடையாது. தொலைபேசி தொடர்புகள் அனைத்தும் ஏறத்தாழ முடங்கியிருந்த அந்த நிலையிலும் என் நண்பர் சுஜித் பிரபு, தொலைபேசி மூலம் எனக்கு சுனாமி என்றால் என்ன என்றும், அதன் காரணங்கள், அதன் பாதிப்புகள் குறித்தும் ஒரு வகுப்பு எடுத்தார். அவருக்கு நன்றி கூறிவிட்டு அலுவலகம் திரும்ப முயற்சித்தபோது, சாலைகளில் பெரும் நெருக்கடி. 


சுனாமியை வேடிக்கை பார்ப்பதற்காக மக்கள் பெரும் திரளாக கடற்கரைப்பகுதியை முற்றுகை இட்டதால் சாலைகள் அனைத்தும் போக்குவரத்துக்கு இடையூறாக முடங்கின. மிகுந்த சிரமத்திற்கு இடையில் எங்கள் அலுவலகத்தை அடைந்து அவசர அவசரமாக செய்திகளை தயாரித்தோம். நாங்கள் தயாரித்த செய்திகள் வெளியாகத் தொடங்கின. 


விஜய் டிவிக்காக என்டிடிவி செய்தி தயாரித்து கொடுத்து வந்தது. திடீரென விஜய் டிவி நிர்வாகம் செய்தி தேவையில்லை என்று முடிவு செய்யவே, அங்கு பணியாற்றிய சிலர் ஒரு குழுவாக நான் பணியாற்றிய தொலைகாட்சியில் சேர்ந்தனர். புதிதாக பணியில் சேர்ந்திருந்த அவர்கள், பழைய பணியாளர்களைவிட தொழில்நுட்பத்தில் தேர்ந்து இருந்தனர்.

தொழில்நுட்பத்தின் உதவியுடன் செய்தி வழங்கத் தொடங்கிய அவர்கள், ஒரு இயற்கை பேரிடரை அரசியலாக்கினர். சுனாமி என்ற பெயரை இந்தியர்கள் முதன் முதலில் அறிமுகம் செய்து கொண்ட அன்றைய சூழலில், தமிழ்நாட்டில் ஆட்சியில் இருப்பவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எதையுமே செய்யவில்லை என்ற பாட்டை பாட ஆரம்பித்தனர். நான் பணியாற்றிய நிறுவனமும், அதை விரும்பி ஊக்குவித்தது. 

அலுவலகம் சென்றபோது, உடனடியாக நாகப்பட்டினம் செல்லமுடியுமா? என்று கேட்டனர். நிர்வாகம் விரும்பியவாறு செய்திகளை திரித்துக்கூற விரும்பாததால், உடனடியாக மறுத்தேன். எனினும் சுனாமி பாதித்த கடலோர பகுதிகளில் இருக்கும் வெளியூர் செய்தியாளர்களை தொடர்பு கொண்டு, செய்தி ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபட்டேன். 


+++


னைத்து அவலங்களையும் போல சுனாமியும் சில நாட்களில் மீடியாவிடம் முக்கியத்துவத்தை இழந்தது. எனவே என் வழக்கமான பணியிடமான சென்னை உயர்நீதிமன்றத்தை சரண் அடைந்தேன். ஒரு நாள் அலுவலகத்திலிருந்து நண்பர்கள் தொலைபேசி மூலம் அழைத்தனர். செய்திப்பிரிவில் பணியாற்றும் அனைவரையும் நிறுவனத்தலைவர் நேரில் பார்க்க இருப்பதாகவும், எனவே மதியம் இரண்டு மணிக்கு அலுவலகம் வருமாறும் கூறினர். அலுவலகம் சென்றபோது நண்பர்களில் சிலர் மகிழ்ச்சியாக இருந்தனர். விசாரித்தேன். 
.
சுனாமி அவலத்தின்போது எங்கள் செய்திச்சானல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருந்ததாகவும், எனவே செய்திப்பிரிவு பணியாளர்கள் அனைவருக்கும் அரை மாத சம்பளத்தை, சிறப்புப்பரிசாக நிர்வாகம் வழங்குவதாகவும் தெரிந்தது. நிறுவனத்தலைவரே அனைத்து பணியாளர்களுக்கும் நேரடியாக அன்பளிப்புத் தொகையை அளித்தார். 


ஒரு ஊடக முதலாளியின் தொழில்ரீதியான மகிழ்ச்சி எவ்வளவு கொடூரமானது என்பது புரிந்தது. எனக்கு கிடைத்த சுனாமிப் பரிசை அரசின் சுனாமி நிவாரண நிதிக்கு அளித்தேன். 


இந்த பரிசுத்தொகை வாகன ஓட்டுனர்களுக்கு வழங்கப்படவில்லை. ஏனென்றால் அவர்கள் செய்திப்பிரிவு பணியாளர்கள் கிடையாது! வாகன ஓட்டுனர்கள் இல்லாமல் செய்திப்பிரிவு எப்படி இயங்கும் என்றெல்லாம் முட்டாள்தனமாகவோ, புத்திசாலித்தனமாகவோ கேட்கக்கூடாது. அதுதான் பிழைக்கும் வழி!


+++


சியக் கண்டத்தை உலுக்கிய இந்த சுனாமி குறித்து ஏறக்குறைய அனைத்து உலகமும் அக்கறையுடன் கவனம் செலுத்திய அந்த (26-12-2004) நாளில் டெல்லியில் மத்திய அரசு சத்தமின்றி ஒரு காரியம் செய்தது. 


உலக வங்கியின் உத்தரவுப்படி, Patent Act எனப்படும் காப்புரிமை சட்டத்தில் பன்னாட்டு வணிக நிறுவனங்களுக்கு ஆதரவான – மக்களுக்கு எதிரான மாற்றத்தை ஏற்படுத்தும் அவசர சட்டம் ஒன்றை நிறைவேற்றியது. இதற்கான கையொப்பத்தை இட்டவர் பெரும்பாலான இந்தியர்களால் விவரம் புரியாமலே பாராட்டப்படும் அன்றைய குடியரசுத்தலைவர் "கனவு நாயகன்" அப்துல் கலாம். 


+++


சுனாமியால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டாலும், சுனாமியால் பலன் அடைந்த ஒரே துறை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்தான். சுனாமி நிவாரணத்துக்காக வெளிநாடுகளில் இருந்து வந்த பல ஆயிரம் கோடி ரூபாய்கள் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாகத்தான் விநியோகிக்கப்பட்டது. அல்லது அவ்வாறு கணக்கெழுதப்பட்டது.


அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் மிஞ்சும்வகையில் ஊழல்மயமான பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்த சுனாமி நிவாரணத்தில் ஒரு கை பார்த்தன. மிகச்சிறிய அளவில் இயங்கி வந்த பல நிறுவனங்கள் இந்த சுனாமி காரணமாக கோடிஸ்வர நிறுவனங்களாக வளர்ந்தன.


+++


ந்த சுனாமி குறித்து மத்திய அரசுக்கு முன்கூட்டியே தகவல் வந்தது: அது உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. இருக்கட்டும். 


இன்றைய நிலையில் மீண்டும் ஒரு சுனாமி வந்தால் அதை சமாளிக்க இந்தியாவோ, தமிழ்நாடோ தயாராக இருக்கிறதா என்று எண்ணிப்பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். 


+++
சுனாமியில் மனிதர்களுக்கு பேரழிவுகள் ஏற்பட்டாலும், பெரும்பாலான விலங்குகள் தப்பித்தன. அடைத்து வைக்கப்பட்ட மற்றும் கட்டிப்போடப்பட்டிருந்த கால்நடைகள் உயிரிழந்திருக்கலாம். அவ்வாறில்லாத விலங்குகள் அனைத்தும் தப்பிவிட்டன. 


ஐந்தறிவு கொண்ட விலங்குகளுக்கு இயற்கையின் மொழி புரிகிறது. ஆறாம் அறிவு கொண்டுள்ளதாக நம்பப்படும் மனித இனத்திற்கு இயற்கையின் மொழி புரியவில்லை. 


+++ 


நான்கு நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்தாலே வெள்ளம் பெருக்கெடுத்தோடி மனித உயிர்கள் பலிவாங்கப்படும் நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகளை முற்றிலுமாக புறந்தள்ளி, முழுப்பொய்களைக் கொண்டு அணுமின் உலைகள் உருவாக்கப்படுகின்றன. 


ஆனால் வெள்ளம், புயல், சுனாமி போன்ற அழிவுகளுக்குப் பின்னாலும் பலர் இருந்து சிரமப்படக்கூடும். ஆனால் அணுமின் உலைகளில் அதுபோன்ற அவலங்கள் நேராது என்று நம்பலாம். ஏனென்றால் இங்கே உள்ள அணுமின் உலைகளில் பெரிய விபத்துகள் ஏதும் நேரிட்டால் புலம்புவதற்கு யாரும் மிஞ்சப்போவதில்லை...!