01 ஆகஸ்ட், 2008

பேரா சுப.வீரபாண்டியன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்!

மதிப்பிற்குரிய பேராசிரியர் திரு.சுப.வீரபாண்டியன் அவர்களுக்கு,


வணக்கம்.


தமிழகத்தின் மிகச்சில சுயசிந்தனையாளர்களில் ஒருவர் நீங்கள். பெரியாரியத்தையும், மார்க்சியத்தையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் சீரிய பணியி்ல் தாங்கள் இருக்கிறீர்கள் என்பதும் உண்மையே.

தமி்ழ் ஆர்வலர்கள் பலரும் பழந்தமிழ் பெருமை பேசி செம்மாந்தும், செயலற்றும் இருக்கையில், நீங்கள் நடைமுறை வாழ்க்கை குறித்த பல அம்சங்களை பேசுவதும், செயல்படுவதும் மிகவும் வரவேற்கத்தக்கது.

இலக்கியம் என்பது காலத்தைப் போக்கவே என்பதை ஏற்காத நீங்கள், சமூக மாற்றத்திற்காக மட்டுமே பேசியும் எழுதியும் வருகிறீர்கள் என்பதையும் தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள்.


மனித உரிமைகளுக்காகவும் தாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதை நாடு நன்கு அறியும். மனித உரிமைகள் என்னும்போது சிறைக்கைதிகளின் உரிமைகளுக்காகவும் நீங்கள் கொடுத்த குரல் ஆனந்த விகடன் இதழில் அது ஒரு பொடாக்காலம் என்ற பெயரில் இலக்கியமாகவே பதிவாகி உள்ளது. இடையில் பல்வேறு காரணங்களுக்காக அந்தத் தொடர் நிறுத்தப்பட்டாலும், உங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை நீங்கள் மிகச்சரியாகவும், நியாயமாகவும் பயன்படுத்தியதாகவே பலரும் நம்புகின்றனர்.


தற்போது திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் ஆகஸ்ட் 2ம் தேதியன்று மரண தண்டனை ஒழிப்பு கோரிக்கை மாநாடு நடத்துவதும், அதில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தோழர்கள் தொல். திருமாவளவன், சி. மகேந்திரன், கொளத்தூர் மணி, சீமான், தியாகு போன்றவர்களும் கலந்து கொண்டு உரையாற்றுவதும் மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்றாகும்.

மரண தண்டனைக்கு எதிராக உலகளாவிய அளவில் நடக்கும் பிரசாரத்தின் குரல் தமிழ்நாட்டிலும் தங்கள் மூலம் உரத்து ஒலிப்பதில் பெரும் மகிழ்ச்சியே.

இந்த நல்ல நேரத்தில் தங்கள் கவனத்திற்கு மேலும் சில அம்சங்களையும் கொண்டுவர விரும்புகிறேன்.


நமது கண்டனத்திற்குரிய மரண தண்டனை என்பது சட்டரீதியாக நடைபெறும் ஒரு வன்முறையாக உள்ளது. எனினும் இந்த வன்முறையில் பலியாகும் நபர் மீது சட்டப்படி குற்றம் சாட்டப்படுகிறது. அது முறையான ஒரு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுகிறது.


பின்னர் அது தானாகவே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுகிறது. உச்சநீதிமன்றமும் அந்த தண்டனையை உறுதி செய்தபின்னர் குடியரசுத்தலைவரிடம் கருணை காட்டும் மனு அளிக்கப்படுகிறது. அந்த கருணை மனுவும் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.


இந்த நடைமுறைகள் அனைத்தும் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதாக யாரும் உறுதி அளிக்க முடியாது ஆனால் பெயரளவுக்காவது சட்டரீதியான ஒரு விசாரணை நடப்பதை யாரும் மறுக்கவும் முடியாது.


ஆனால் இந்தமாதிரி குறைந்த பட்ச விசாரணைகூட இல்லாமல், எந்த நீதிமன்றமும் தண்டனை விதிக்காமல், மேல்முறையீட்டுக்கு எந்த வாய்ப்பும் இல்லாமல் யாருடைய கருணையும் இல்லாமல் நாட்டில் பல படுகொலைகள் என்கவுன்டர் என்ற பெயரில் நடப்பதை நீங்களும் அறிவீர்கள். நாடும் அறியும்.

என்கவுன்டரில் கொல்லப்படுபவர்மீது எந்த அக்கறையும் இல்லாதவர்கள்கூட, அவர்கள் கொல்லப்படும் முறையை ஏற்க மாட்டார்கள். இவ்வாறு கொல்லப்பட்ட ராஜாராம் என்ற நபருடன் சிறைக்கொட்டடியில் தாங்கள் நேரடியாக பழகியவர். அந்த ராஜாராம், விசாரணைக்காக நீதிமன்றம் (வழக்குமன்றம்?) –த்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது தப்பியோட முயன்றதாகக்கூறி காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மரணம் தங்களையும் கடுந்துயரில் ஆழ்த்தியது.


இந்த சம்பவத்தால் மனம் வெதும்பிய நீங்கள், இதனையும் அது ஒரு பொடாக்காலம் தொடரில் சித்திரமாக தீட்டியுள்ளீர்கள்.

உங்கள் மீது தொடரப்பட்ட பொடா வழக்குகள் திரும்பப்பெறப் பட்டுவிட்டாலும் தமிழகத்தில் பாவப்பட்ட சிலர் மீதான பொடா வழக்குகள் தொடர்ந்து நடந்து வருவதை நீங்கள் அறிந்திருக்கக்கூடும். அதைப்பற்றி இப்போது பேசவில்லை.


ஆனால், தங்கள் ஆதரவைப் பெற்ற தற்போதைய ஆட்சியிலும், என்கவுன்டர் மூலமாக 16 படுகொலைகள் நடைபெற்றுள்ளன. இவற்றை சட்ட அடிப்படையிலோ, கோட்பாடு அடிப்படையிலோ ஆதரிக்க முடியாது என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என்றே நம்புகிறேன்.


இத்தகைய மோதல் மரணங்கள் குறித்து பல காலமாக நாட்டில் விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த மரணங்களை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் 1993ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே அறிவுறுத்தி உள்ளது.


தற்போதைய தமிழக அரசும், தேசிய மனித உரிமை ஆணைய அறிவுறுத்தலை ஏற்று கடந்த 08-08-2007 அன்று அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் இதனை அமல்படுத்துவதில்தான் காவல்துறை அதிகாரிகளுக்கு இயலாத காரியமாகி விடுகிறது.


தற்போதைய ஆட்சியாளர்களுடன் நல்லுறவுடன் இருக்கும் தாங்கள், இந்த என்கவுன்டர் படுகொலைகளுக்கு எதிராகவும் களம் இறங்கி பணியாற்றினால் நாம் அனைவரும் வெறுக்கும் என்கவுன்டர் படுகொலைகளுக்கும் முடிவு கட்டமுடியும் என்று நான் உளமாற நம்புகிறேன்.

சட்டரீதியாக நடைபெறும் மரண தண்டனைக்கு எதிராக உரத்து குரல் எழுப்பும் நீங்கள், சட்டவிரோதமாக நடைபெறும் இந்த என்கவுன்டர் படுகொலைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.


மிகுந்த நம்பிக்கையுடன்,


சுந்தரராஜன்

18 ஜூன், 2008

கிரிக்கெட்டும், பெரியாரின் சீடர்களும்...!

சுமார் 170 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின், பிரபல உறுப்பினரும், பிரிட்டிஷ் அரசாங்கத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவரும், 1934ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு அமைத்த சுப்ரீம் கவுன்சில் ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் முக்கிய உறுப்பினருமான மெக்காலே பிரபு நான்காண்டுகள் நமது நாட்டை சுற்றிப் பார்த்துவிட்டு ஆங்கிலேய அரசுக்கு எழுதியது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LORD MACAULAY’S ADDRESS TO THE BRITISH PARLIAMENT 2 FEBRUARY, 1835

I have traveled across the length and breadth of India and I have not seen one person who is a beggar, who is a thief, such wealth I have seen in this country, such high moral values, people of such caliber, that I do not think we would ever conquer this country, unless we broke the very back bone of this nation, which is her spiritual and cultural heritage, and, therefore, I propose that we replace her old and ancient education system, her culture, for if the Indians think that all that foreign and English is good and greater than their own, they will loose their self esteem, their native culture and they will become what we want them, a truly dominated nation.



(நான் இந்திய நாடு முழுக்க சுற்றிப்பார்த்ததில் ஒரு பிச்சைக்காரரையோ, திருடனையோ பார்க்கமுடியவில்லை. அத்தகைய வளம் மிகுந்த இந்நாட்டின் அறம் சார்ந்த மக்களை நாம் வெற்றி கொள்ள வேண்டுமானால் அவர்களது ஆன்ம-கலாச்சார பாரம்பரியத்தை உடைத்தாக வேண்டும். அதற்கு இந்தியாவின் பழமையான மற்றும் பாரம்பரிய கல்விமுறையை அகற்றிவிட்டு அவற்றைவிட மேலைநாட்டு விஷயங்களும், ஆங்கிலமும் உயர்ந்தது என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலமாக அவர்கள் தன்னம்பிக்கையையும், சுய கலாச்சார அடையாளங்களையும் இழந்து, நாம் விரும்புவதைப்போல நம்மால் ஆளப்படும் மக்களாக மாறிவிடுவார்கள்!)


சில வாரங்களுக்கு முன் புதுவையில் பெரியார் திராவிடர் கழகத்தின் நிர்வாகிகள், அந்த அமைப்பின் உறுப்பினர்களுக்கு நடத்திய பயிற்சி முகாம் ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. உலக மயமாக்கம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து உரையாடப்போன நமக்கு, புதுவையில் அமையவிருந்த துறைமுகத்தை துரட்டியடித்த அந்த தோழர்களின் அனுபவம் பாடமாக அமைந்தது.

அதேபோல சேலம், மேட்டூர் பகுதியில் நடந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள், மரபணு மாற்று வேளாண்மைக்கு எதிரான தங்கள் போராட்டங்களைப் பற்றிக்கூறினர்.

இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையில் தமிழக முதலமைச்சர் திரு. கருணாநிதி அவர்களின் 85வது பிறந்த நாள் அமர்க்களமாக வந்துபோனது.
இந்த நன்னாளை ஒரு மாத காலத்திற்கு கொண்டாட தி.மு.க.வின் இளைஞர் அணி முடிவெடுத்து, சென்னையின் பல விளையாட்டு மைதானங்களில் மின்னொளியில் கிரிக்கெட் போட்டி நடத்தி வருகிறது. சுமார் 1358 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டிகளில் 15,000 வீரர்கள் கலந்து கொண்டு விளையாடுவதாக பிரமாண்டமான பிளக்ஸ் பேனர்கள் கூறுகின்றன.

கிரிக்கெட் விளையாட்டைப் பற்றி பல்வேறு அரசியல் கருத்துகள் உண்டு.

எந்த ஒரு நடவடிக்கையையும் அரசியல் கண்ணோட்டத்திலேயே பார்த்த, பார்க்கத்தூண்டிய பெரியாரின் மாணவர்கள், விளையாட்டை விளையாட்டாக மட்டுமே பார்க்க முடியாது. அதன் பின் உள்ள அரசியலையும் பார்த்தே ஆக வேண்டும்.

17ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் மாடு மேய்க்கும் சிறுவர்களின் விளையாட்டாக ஆரம்பித்த கிரிக்கெட் பின்னர், நிலப்பிரபுக்கள் மட்டுமே விளையாடும் “ஜென்டில் மேன்” விளையாட்டாக மாறிப்போனது. மாடு மேய்க்கும் சிறுவர்கள் அந்த விளையாட்டை தொடரமுடியாதவாறு அதன் விதிமுறைகள் வகுக்கப்பட்டன. அவற்றில் முக்கியமானது வெள்ளை ஆடை.

இவ்வாறாக ஆரம்பித்த கிரிக்கெட் வரலாறு ஒலிம்பிக் போட்டிகளிலும் இடம் பெற முயன்று, சில போட்டிகளில் மட்டுமே இடம் பெற்று, ஒலிம்பிக்கில் இடம் பெறும் தகுதியை இழந்தது.

இந்த கிரிக்கெட் விளையாட்டை இன்று விளையாடும் பல நாடுகள் முன்பொரு காலத்தில் இங்கிலாந்து நாட்டிடம் அடிமையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே கிரிக்கெட் விளையாட்டை “அடிமைப்புத்தியின் நீட்சி” என்றும் சொல்லலாம்.

ஐக்கிய நாடுகள் அவையின் அங்கீகாரம் பெற்ற நாடுகள் 192 இருக்கையில், வெறும் 12-13 நாடுகள் மட்டுமே விளையாடும் கிரிக்கெட்டில் “உலகப்போட்டி” நடத்தும் நகைச்சுவை நம்மில் பலருக்கும் புரியாமல் போனது தமாஷான புதிர்தான்.

இந்திய கிரிக்கெட் அணிக்கும், இந்திய அரசுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது இப்போதும் பலருக்கும் தெரியாது. அதேபோல இந்த வீரர்(!)களுக்கு மத்திய-மாநில அரசுகள் வீடு உள்ளிட்ட பரிசுகளை அளிப்பது எந்த அடிப்படையில் என்பதும் யாருக்கும் தெரியாது.

இந்த இந்திய அணியும் பல்வேறு தொழில் நிறுவனங்களின் அடிமைகளாக பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த அடிமைகளின் விளையாட்டை மையப்படுத்தி பல சூதாட்டங்கள் நடைபெறுவதும் அனைவரும் அறிந்ததே.

வணிகமயமாகிப்போன இந்த விளையாட்டின் நிர்வாகிகளாகவும், தூதர்களாகவும் நடிகர்கள் மாறிப்போனதும், கவர்ச்சி அம்சங்கள் சேர்க்கப்பட்டதும் அண்மைக்கால வரலாறு.

ஆனாலும், இந்த கிரிக்கெட் விளையாட்டின் ரசிகன் நான் என்று கூறிக்கொள்வதில் அரசியல் தலைவர்கள் யாரும் தயக்கம் காட்டுவதில்லை. தமிழகத்திலோ ஆளுனரும், முதல்வரும் இணைந்து சென்று இந்த “வீர” விளையாட்டை துவக்கியும் வைப்பார்கள்.

இந்த விளையாட்டுப் போட்டி நடைபெறும்போது ஏற்படும் உற்பத்தி இழப்பு குறித்து யாருக்கும் கவலையில்லை. சொல்லப்போனால் இந்த விளையாட்டையும் சேர்த்துப்பார்த்து மக்கள் அறிவைப் பெருக்கிக் கொள்ளத்தான் “இலவச வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டி” வழங்கப்பட்டது.

“மானாட மயிலாட” நிகழ்ச்சி பார்த்து அறிவை வளர்த்துக் கொண்ட பெண்கள் வீட்டில் அதனை ஆடிப்பார்க்கலாம். அதேபோல கிரிக்கெட் போட்டி பார்த்து அறிவை வளர்த்துக் கொண்ட ஆண்கள் அதனை ஆடிப்பார்க்க ஒரு வாய்ப்பு வேண்டுமல்லவா? அதற்குத்தான் இந்த இரவு நேர கிரிக்கெட் போட்டிகள்.

நாட்டின் இறையாண்மையை அரசுத்தலைவர்களை கூறுபோட்டு விற்கும் நிலையில், மக்களின் நாட்டுப்பற்று கிரிக்கெட்டில் மட்டுமே உயிர்வாழ்கிறது. நம்புங்கள்! இளைய தலைமுறையின் பகுத்தறிவை வளர்க்கும் நோக்கில் தான் இந்த கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆனால் இந்த போட்டியில் வீழ்த்தப்படும் விக்கெட்டுகள்: சுயமரியாதை, சமூக சிந்தனை, பகுத்தறிவு!
பெரியார் திராவிடர் கழக பயிற்சி வகுப்புக்கு வந்த ஒரு தோழரிடம், “கிரிக்கெட் பார்ப்பீர்களா?” என்று கேட்டபோது, “நான் பெரியாரின் மாணவன். கிரிக்கெட்டை ஒழிக்கும் வழியைத் தேடிக்கொண்டிருக்கிறேன்” என்றார்.